திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் பக்தி உற்சாகத்தில் ஒளிர்ந்தது. இங்கு ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும் கத்தி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா, இந்த ஆண்டு மீண்டும் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 50 அடி உயரமுள்ள வாள் முனிஸ்வரர் சிலை அமைந்திருப்பதால், இந்தக் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணியஸ்தலமாக திகழ்கிறது. இவ்விழாவில், பாரம்பரியமாக சீமாபுரம் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வாளை சமர்ப்பித்து வருகின்றனர். இம்முறை, 8 அடி உயரம் மற்றும் 40 கிலோ எடையுடைய வெள்ளியால் ஆன வாள் மேளதாளம் முழங்க, ஆட்டம்–பாட்டம் என ஆனந்தக் களிப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதுகடந்த 5 ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் நடந்ததால் விழா நடைபெறாமல் இருந்தது. ஆனால், தற்போது கும்பாபிஷேகம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, 145வது கத்தி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மன்னீஸ்வரரின் அருளைப் பெற்றனர்.
..